568 ஜோடிகளுக்கு திருமணம் : போலி திருமணம் நடத்தியதாக குற்றச்சாட்டு... 15 பேர் கைது!

Sinoj

செவ்வாய், 6 பிப்ரவரி 2024 (18:29 IST)
உத்தரபிரதேசம் மாநிலத்தில் சுமார் 568 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்ட  நிலையில், இதில் போலி திருமணம்  நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  இக்குற்றச்சாட்டில் அரசு அதிகாரிகள் 2 பேர் என மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேசம் மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள பாலியா மாவட்டத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி அரசு சார்பில் இலவச திருமணங்கள் நட்த்தி வைக்கப்பட்டன. இதில், சுமார் 568 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டதாக அரசு அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டது.

இந்த நிலையில், இது உண்மையான கணக்கில்லை என்றும், போலி கணக்கு எழுதுவதற்காக, பலர் மணமகன் மற்றும் மணமகளாக  நடிக்க அழைத்து வரப்பட்டதாக தெரியவந்துள்ளது.

இதற்காக அவர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.500  முதல் ரூ.2000 வரை வழங்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்த வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், விசாரணை நடந்து வருகிறது. போலி திருமணம் தொடர்பான இக்குற்றச்சாட்டில் அரசு அதிகாரிகள் 2 பேர் என மொத்தம் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலவச திருமணங்களுக்காக ஜோடி ஒன்றுக்கு 51 ஆயிரம் வழங்கப்படும் நிலையில், ரூ. 35 ஆயிரம் பணமாகவும், மீதி 16 ஆயிரம் ரூபாயில் ரூ.10 ஆயிரம் மதிப்பில் திருமண பொருட்களுக்கும், ரூ.6 ஆயிரம் திருமண நிகழ்ச்சிக்கும் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்