ரஜினியை பாராட்டிய கமலுக்கு ரசிகர்கள் கண்டனம்

வியாழன், 27 பிப்ரவரி 2020 (08:45 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று செய்தியாளர்களை சந்தித்த போது எதிர்பாராத வகையில் மத்திய அரசைக் கடுமையாகக் கண்டித்தார். டெல்லி வன்முறைக்கு மத்திய அரசின் உளவுத்துறையின் தோல்வி தான் காரணம் என்றும் ஆரம்பத்திலேயே இந்த கலவரத்தை அடக்கி ஒடுக்கி இருக்கலாம் என்றும், மத்திய அரசின் கவனக்குறைவால்தான் இந்த கலவரம் பெரிதாகி உள்ளது என்றும் கூறினார் 
 
மேலும் மதத்தை வைத்து அரசியல் செய்வதை தான் ஒருபோதும் விரும்பவில்லை என்றும் அவ்வாறு மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களை கடுமையாக கண்டனம் தெரிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். மத்திய அரசை இதுவரை நேரடியாக ரஜினி விமர்சனம் செய்யாத நிலையில் திடீரென அவர் மத்திய அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தது குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது: சபாஷ் நண்பர் ரஜினிகாந்த்  அவர்களே, அப்படி வாங்க. இந்த வழி நல்ல வழி. தனி வழி அல்ல, ஒரு இனமே நடக்கும் ராஜ பாட்டை.
வருக, வாழ்த்துக்கள்’ என தெரிவித்துள்ளார்
 
கமலஹாசனின் இந்த டுவிட்டுக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த் எப்போதும் உண்மையை தான் பேசுவார் என்றும், பாராட்ட வேண்டிய நேரத்தில் பாராட்டுவதோடு கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பார் என்றும் கண்மூடித்தனமாக மத்திய அரசின் அனைத்து கொள்கைகளையும் எதிர்க்க வேண்டும் என்று அவர் ஒருபோதும் விரும்பியதில்லை என்றும் மத்திய அரசுக்கு எதிராக ரஜினியை திருப்பும் முயற்சியில் கமல் ஈடுபட்டால் அதில் அவருக்கு தோல்விதான் கிடைக்கும் என்றும் ரஜினி ரசிகர்கள் அந்த டுவிட்டுக்கு கமெண்டுக்களை பதிவு செய்து வருகின்றனர் 
 
ரஜினி கமல் ஆகிய இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் பணிபுரிய உள்ளதாகவும் அதுமட்டுமின்றி வரும் தேர்தலில் இருவரும் இணைந்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் ரஜினி, கமல் ரசிகர்கள் ஒருபோதும் இணைய மாட்டார்கள் என்பதையே இந்த கருத்துக்கள் தெரிவிப்பதாக கூறப்படுகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்