தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கேரளா, தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருவதைப் பார்த்து வருகிறோம். அந்த வகையில், இன்று தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கண்ட ஏழு மாவட்டங்களில் உள்ளவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ஏற்கனவே கடந்த ஒரு வாரமாக சென்னையில் பகல் நேரத்திலும், புறநகர்ப் பகுதிகளில் இரவு நேரத்திலும் மழை பதிவாகி வரும் நிலையில், இன்றும் இரவு நேரத்தில் மிதமான மழை பெய்யலாம்.