காசுக்கு கணக்கு வெச்சுருக்கியா? முட்டை வியாபாரியிடம் பணம் அபேஸ் – சென்னையில் நூதன கொள்ளை!

ஞாயிறு, 30 ஆகஸ்ட் 2020 (12:38 IST)
சென்னையில் போலீஸ் போல வேடமிட்டு முட்டை வியாபாரியிடம் லட்சக்கணக்கில் கொள்ளையடித்த கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் ஜாகிர் உசேன் தெருவை சேர்ந்தவர் முகமது வாசிம். அந்த பகுதியில் முட்டை வியாபாரம் செய்து வரும் அவர் நேற்று முன் தினம் பணம் எடுத்துக் கொண்டு சிருங்கேரி மடம் சாலையில் வந்துள்ளார். அப்போது அங்கு நின்ற போலீஸார் இருவர் அவரை நிறுத்தி எங்கு போய் வருகிறீர்கள்? பணம் எவ்வளவு வைத்துள்ளீர்கள்? என விசாரித்துள்ளனர்.

அவரிடம் 2.25 லட்ச ரூபாய் இருப்பதாக கூறவும் அதை அவரிடமிருந்து பறிமுதல் செய்த அவர்கள் இந்த பணத்திற்கான முறையான ரசீது உள்ளதா என கேள்வி எழுப்பியுள்ளனர். வாசிம் ரசீது இல்லை என்று கூற உரிய ரசீதை காட்டி பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு சொல்லிவிட்டு அங்கு வந்த இன்னோவா கார் ஒன்றில் ஏறி சென்றுள்ளனர்.

இதுகுறித்து வாசிம் தனது வீட்டில் உள்ளவர்களிடம் சொல்ல அவர்கள் நேராக காவல் நிலையம் சென்று விசாரித்துள்ளனர். அப்போதுதான் காவலர்கள் எந்த பணத்தையும் பறிமுதல் செய்யவில்லை என்றும், போலீஸ் வேடமிட்ட கும்பல் இந்த நூதன கொள்ளை சம்பவத்தை நடத்தியுள்ளதும் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்