மெரினாவில் நடந்தது என்ன? வீடியோ ஆதாரங்களுடன் காவல் துறை!!

Webdunia
ஞாயிறு, 29 ஜனவரி 2017 (09:35 IST)
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் போது, போலீசார் தடியடி நடத்தி அதனை கலவரமாய் மாற்றினர்.


 
 
இதனை சென்னை பெருநகர தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் சங்கர் முற்றிலும் மறுத்துள்ளார். மேலும், மெரினாவில் என்ன நடந்தது என்பதற்கு வீடியோ ஆதாரங்களையும் சமர்பித்தார்.
 
சென்னை தெற்கு மண்டல காவல் துறை கூடுதல் ஆணையர் சங்கர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுக்க மெரினாவில் பல லட்சம் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு தொடர்பாக முதல்வர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பேசினார்.
 
பின்னர், மெரினா போராட்டக்காரர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்றது. முதல்வர் எடுத்த நடவடிக்கைகள் குறித்து போராட்டக்காரர்களிடம் விளக்கினோம். ஆனால், பிரதமர் உறுதி அளித்ததைத் தொடர்ந்தும் மாணவர்கள் கலைந்து செல்லவில்லை. 
 
பின்னர் வாடிவாசல் திறக்கும் என்ற முதல்வரின் அறிவிப்பு ஜனவரி 21 ஆம் தேதி தெரிவிக்கப்பட்டது. ஜனவரி 22 ஆம் தேதி அரசு அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டதாக அறிவித்தது. ஆனால், ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற உறுதியை மாணவர்கள் ஏற்றாலும் ஒரு சில இயக்கங்கள் மட்டும் ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்தனர். 
 
இதில், ஒரு சில பிரிவினர் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தை மாணவர்கள் வாபஸ் பெறவிடாமல் சிலர் தடுத்தனர். இதனிடையே நடுக்குப்பம் பகுதியில் இருந்து வந்த சிலர் தடியடி நடத்தியதாக வதந்திகளை பரப்பினர். பெட்ரோல் குண்டுகளையும், கற்களையும் வீசினர். இதனால் வன்முறை வெடித்தது. 
 
குடியரசு தினவிழாவை சீர்குலைக்கும் நோக்கில் சமூக விரோதிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், ஜனவரி 23 ஆம் தேதி காலை போராட்டக்காரர்களை அமைதியாக கலைக்கும் நோக்கத்துடன் தான் போலீசார் அங்கு கூடினோம். மெரினா போராட்டக்காரர்கள் மீது தடியடி எதுவும் நடத்தப்படவில்லை என்று கூறினார்.
அடுத்த கட்டுரையில்