பஸ்ஸே வருவதில்லை.. கிளாம்பாக்கத்தில் பயணிகள் அவதி.. அரசின் விளக்கம் என்ன?

Siva

ஞாயிறு, 8 ஜூன் 2025 (11:17 IST)
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நள்ளிரவு நேரங்களில் ஏராளமான பயணிகள் ஒரே நேரத்தில் திரண்டுவிடுவதால், அந்த நேரத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்குவது கடினமாக இருப்பதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் கூறியுள்ளார்.
 
சென்ற 4ம் தேதி இரவு, கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்களை நோக்கி செல்ல வேண்டிய பஸ்கள் இல்லாததால், நூற்றுக்கணக்கான பயணிகள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த சூழ்நிலைக்கு விளக்கம் அளிக்கக்கூடிய வகையில், விரைவு போக்குவரத்துக் கழகம் செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
 
அதில், கிளாம்பாக்கத்தில் இருந்து தினமும் சுமார் 1,136 பஸ்கள் இயக்கப்படுவதுடன், கடந்த 4ம் தேதி கூடுதலாக 200 பேருந்துகள், 5ம் தேதி 622 பேருந்துகள் மற்றும் 6ம் தேதி 798 பேருந்துகள் இயக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இந்த 3 நாட்களில் 2.76 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்; இதில் 24,831 பேர் முன்பதிவு செய்தவர்கள் என தெரிவிக்கப்பட்டது.
 
முன்பதிவு இல்லாமல் பயணிகள் ஒரே நேரத்தில் திரள்வதால், இடர் ஏற்படுகிறது. எனவே, www.tnstc.in இணையதளம் மற்றும் மொபைல் செயலி மூலம் முன்பதிவை மேற்கொண்டு பயணிக்குமாறு பயணிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் துரிதமாக இயக்க இயலும் என்றும் கூறப்பட்டுள்ளது.
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்