சென்னையிலிருந்து வந்தவர்களால் வெளி மாவட்டங்களில் கொரோனா!? – அதிர்ச்சி தகவல்!

புதன், 17 ஜூன் 2020 (08:46 IST)
சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்த உள்ள நிலையில் அங்கிருந்து மற்ற மாவட்டங்களுக்கு சென்றவர்களால் கொரோனா அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் இருந்தாலும் தலைநகரமான சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளான செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இந்த பகுதிகளில் பாதிப்புகளை கட்டுப்படுத்த ஜூன் 19 முதல் 30 வரை முழு பொதுமுடக்கத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனால் சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டத்தினர் பலர் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு இ-பாஸ் பெற்றுக் கொண்டு புறப்பட தொடங்கியுள்ளனர். இந்நிலையில் சென்னையிலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு சென்றவர்களால் கொரோனா பாதிப்புகள் மற்ற மாவட்டங்களிலும் அதிகரித்து வருவதாக தெரிகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே 149 பேருக்கு கொரோனா இருந்த நிலையில் புதிதாக 12 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் 161 ஆக பாதிப்புகள் அதிகரித்துள்ளது. இந்த 12 பேருமே சென்னையிலிருந்து மன்னார்குடி, நீடாமங்கலம் பகுதிகளுக்கு சமீப நாட்களில் வந்தவர்கள் என கூறப்படுகிறது. இதேபோல் மற்ற மாவட்டங்களிலும் சென்னையிலிருந்து வந்தவர்களுக்கு கொரோனா இருக்கலாம் என்பதால் சோதனைகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்