தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையவிருப்பதாகவும், அவருக்கு அவைத்தலைவர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு மாற்றாக, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், மக்கள் மத்தியில் இக்கட்சிக்கு நல்ல ஆதரவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டு தனியாக செயல்பட்டு வரும் ஓபிஎஸ், முன்பு பாஜக கூட்டணியில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சமீபத்தில் பிரதமர் மோடியின் தமிழக வருகையின் போது அவருக்கு ஏற்பட்ட அவமதிப்பு, ஓபிஎஸ் தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது.
இந்த சூழ்நிலையில்தான், ஓபிஎஸ் தமிழக வெற்றி கழகத்தில் இணைய பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், அவருக்கு அவைத்தலைவர் பதவி வழங்க விஜய் சம்மதம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அவருடன் முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனும் தமிழக வெற்றி கழகத்தில் இணைவார் என்று கூறப்படுவதால், அரசியல் வட்டாரத்தில் மேலும் பரபரப்பு நிலவுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்துடன் ஓபிஎஸ் இணைந்தால், தென் மாவட்டங்களில் அவரது சமுதாய வாக்குகள் தமிழக வெற்றி கழகத்திற்குக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது விஜய்யின் கட்சிக்கு கணிசமான பலத்தை கொடுக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.