எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

Mahendran

வியாழன், 31 ஜூலை 2025 (15:44 IST)
முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்  இன்று  தனது ஆதரவாளர்களுடன் நடத்திய ஆலோசனை கூட்டம் நடத்திய நிலையி, அவரது ஆதரவாளர்கள், "நம்பிக்கைத் துரோகி எடப்பாடி பழனிசாமி ஒழிக!", "குருமூர்த்தி ஒழிக, அண்ணாமலை ஒழிக!" என்று  கோஷமிட்டது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் ஓபிஎஸ்-ன் மகன்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டம் முடிந்த பின்னர், ஓபிஎஸ்-ன் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ஓபிஎஸ் விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என்றும், இப்போதைக்கு எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்றும் தெரிவித்தார். மேலும், எதிர்காலத்தில் அரசியல் நிலவரம் குறித்து முடிவெடுப்போம் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம் என்றும் அவர் கூறினார்.
 
ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு ஓபிஎஸ் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஓபிஎஸ்-ன் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் என்னவாக இருக்கும், குறிப்பாக வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அவரது நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பது தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்