இன்னும் இரண்டே மாசம்தான்.. வருகிறது கிளாம்பாக்கம் ரயில் நிலையம்! - பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்!

Prasanth K

திங்கள், 30 ஜூன் 2025 (15:45 IST)

சென்னையில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் அருகே கட்டப்பட்டு வரும் புதிய ரயில் நிலையத்தின் பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்ட நிலையில் அடுத்த 2 மாதங்களுக்குள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

சென்னையின் மையத்தில் கோயம்பேட்டில் இயங்கி வந்த பேருந்து முனையம் தாம்பரம் தாண்டி கிளாம்பாக்கத்தில் நிறுவப்பட்ட நிலையில், வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் நாள்தோறும் சென்னைக்கு உள்ளிருந்து பஸ் பிடித்து 1 மணி நேரத்திற்கும் மேலாக பயணித்து கிளாம்பாக்கத்தை அடைய வேண்டிய சூழல் உள்ளது.

 

சென்னையின் பல பகுதிகளில் இருந்து கிளாம்பாக்கத்திற்கு பேருந்துகள் இருந்தாலும், ரயில் சேவை அமைத்தால் பேருந்து பயண நேரம் மிச்சமாகும் என்பது பலரது கருத்தாக உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து முனைய கட்டுமான பணிகளின்போதே, கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திற்கான பணிகளும் தொடங்கப்பட்டு விட்டாலும் இன்று வரை பணிகள் முழுவதுமாக முடியாததால் ரயில் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. அது பயன்பாட்டிற்கு வந்தால் மக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி துன்பப்படுவது குறைவதுடன், பேருந்தை விட குறைந்த நேரத்தில் கிளாம்பாக்கத்தை வந்தடைய முடியும்.

 

இதுகுறித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, கிளாம்பாக்க ரயில் நிலைய பணிகள் 75 சதவீதம் முடிவடைந்து விட்டதாகவும், வரும் ஆகஸ்டு அல்லது செப்டம்பரில் ரயில் நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் மக்கள் பாதுகாப்பிற்காக காவல் நிலையம் அமைக்கும் பணியும் முடிவடைந்துள்ளதாகவும், விரைவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அதை திறந்து வைப்பார் எனவும் அவர் கூறியுள்ளார். கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்பட்டால் தாம்பரம் வழி புறநகர் பேருந்துகளில் கூட்ட நெரிசல் குறையும் என்பதுடன், வெளி மாவட்ட மக்கள் கிளாம்பாக்கம் சென்று வரவும் ரயில் பயணம் உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது,.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்