ஏர்போர்ட்டுக்கு வரதா ஓபிஎஸ்; கடுப்பான ஈபிஎஸ்: பச்சை சால்வை போர்த்தி சமரசம்?

செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (15:56 IST)
இன்று நாடு திரும்பிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்க துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் செல்லாதது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை கூட்டியது. 

 
இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அங்குள்ள தொழிலதிபர்களுடன் பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 
 
குறிப்பாக இந்த பயணத்தில் 41 நிறுவனங்களுடன் ரூ.8,835 கோடி மதிப்பில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழகத்தில் 35,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஆட்சியில் இருந்த போது எம்ஜிஆர், ஜெயலலிதா கூட செய்யாத அரசுமுறை வெளிநாட்டு சுற்றுப்பயணம் செய்து இன்று சென்னை திரும்பியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. 
 
முதல்வரை வரவேற்க அமைச்சர்கள் தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், ஜெயக்குமார், முன்னாள் மக்களவை சபாநாயகர் தம்பிதுரை, பொள்ளாச்சி ஜெயராமன், கட்சி நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் ஆகியோர் சென்றிருந்தனர்.
ஆனால், இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துக்கொள்ளவில்லை. எனவே, முதல்வரை, துணை முதல்வர் கண்டுகொள்ளவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. 
 
ஆனால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஓ.பன்னீர் செல்வம், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பச்சை நிற சால்வை போர்த்தி வெளிநாட்டு பயணம் குறித்து விசாரித்ததாக கூறப்படுகிறது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்