ஜெ. சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி கேமரா? - பிரதாப் ரெட்டி பரபரப்பு பேட்டி

புதன், 27 செப்டம்பர் 2017 (16:23 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி கேமரா இல்லை என அப்போலோ நிறுவனர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.


 


 
சென்னை அப்போலோ மருத்துவமனையில் ஜெ. அனுமதிக்கப்பட்டது முதல் தற்போது வரை அவரின் மரணத்தில் மர்மமே நீடிக்கிறது. அதற்கு முக்கிய காரணம்,  அவர் மருத்துவமனையில் இருந்த போது எடுக்கப்பட்ட புகைப்படமோ அல்லது வீடியோவோ இதுவரை வெளியாகவில்லை என்பதுதான். 
 
அந்நிலையில், ஜெயலலிதாவை நாங்கள் மருத்துவமனையில் பார்க்கவே இல்லை என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலத்திற்கு பின் இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாகியுள்ளது. அதோடு, மருத்துவமனையில் ஜெ.வை சசிகலா வீடியோ எடுத்தார் எனவும், அந்த வீடியோ எங்களிடமே இருக்கிறது என சமீபத்தில் தினகரன் கூறியிருந்தார். மேலும், அந்த வீடியோவில் ஜெயலலிதா உடல் மெலிந்து, நைட்டியில் இருந்தார். எனவே, கண்ணியம் கருதி அதை வெளியிடவில்லை என அவர் கூறியிருந்தார்.


 

 
அந்நிலையில், ஜெ.வின் மரணம் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகச்சாமி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை அப்போலோ நிறுவனர் பிரதாப் ரெட்டி “ விசாரணை கமிஷனை வரவேற்கிறோம். ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையில் சிசிடிவி கேமராக்கள் இல்லை. அந்த அறைக்கு வெளியே, அதாவது பாதுகாப்பு காரணங்களுக்காக வைக்கப்பட்ட சிசிடிவி வீடியோ ஆதாரங்கள் மட்டுமே எங்களிடம் இருக்கின்றன.
 
ஜெ.வின் மரணம் குறித்த முதல் கட்ட விசாரணையின் போதே அவருக்கு அளித்த சிகிச்சை தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைத்து விட்டோம். தற்போது அமைக்கப்பட்டுள்ள விசாரணைக் கமிஷன் குழுவினரிடமும் அந்த ஆவணங்களை சமர்பிப்போம். 
 
இடைத்தேர்தல் வந்த போது, வேட்பாளரை அங்கீகரிப்பதற்கான வேட்பு மனுவில் அவரிடம் கைரேகை பெறப்பட்டது. அப்போது அவர் சுயநினைவுடன் இருந்தாரா என்பது பற்றி விசாரணை கமிஷனிடம் தெரிவிப்போம். மேலும், அவரை யார் யார் சந்தித்தனர் என்பது பற்றிய அனைத்து விவரங்களும் எங்களிடம் இருக்கிறது. அதில் மர்மமோ அல்லது மறைப்பதற்கோ ஒன்றுமில்லை. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்