சிலிண்டர் விலை உயர்வு: மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை அறிக்கை!

புதன், 16 டிசம்பர் 2020 (12:12 IST)
சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 
மத்திய அரசின் அறிவுறுத்தல்படி மாதம்தோறும் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த டிசம்பர் மாதத்திற்கு வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.660 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் கூடுதலா ரூ.50 விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.710 ஆக உயர்ந்துள்ளது. 
 
இந்நிலையில் இதனை வண்மையாக கண்டித்துள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். அவர் தனது அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, மத்தியில் ஆட்சியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, விவசாயிகள் தொடங்கி ஒவ்வொரு குடிமகன் மீதும் தாக்குதலைத் தொடுத்து வருகிறது.
 
ஏழை - நடுத்தர வகுப்பினர் உள்பட அனைத்துத் தரப்பு மக்களின் அத்தியாவசியத் தேவையாக உள்ள பெட்ரோல் – டீசல் - சமையல் எரிவாயு உள்ளிட்ட அனைத்தும் பாஜக ஆட்சியில் தாறுமாறாக விலையேற்றம் கண்டுள்ளன. 
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கேற்ப இவற்றின் விற்பனை விலை மாற்றப்படும் நிலையில், இந்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் பெட்ரோல் - டீசல் விலை நாள்தோறும் மாறுதல்களுக்கு உட்பட்டு, மிகப்பெரிய அளவில் விலையேற்றத்தைக் கண்டுள்ளது. 
 
வீடுகளுக்கு வழங்கப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலையும் இந்த கொரோனா காலத்தில் மீண்டும் மீண்டும் உயர்த்தப்பட்டு வருகிறது. 2020 மே மாதம் ரூ.599.50 என உயர்ந்த சிலிண்டர் விலை, ஜூன் மாதத்திலும் ஜூலை மாதத்திலும் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், டிசம்பர் மாத தொடக்கத்தில் மீண்டும் 50 ரூபாய் விலையேற்றம் செய்யப்பட்டு, ரூ.660 என விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர்களின் விலையை 15 நாட்களுக்குள்ளாக இரண்டாவது முறை மீண்டும் உயர்த்தி, கூடுதலாக ரூ.50 விலையில், ரூ.710-க்கு விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
பொதுமக்களின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 15 நாள் இடைவெளியில் சிலிண்டர் விலை 100 ரூபாய் அதிகமாக்கப்பட்டிருப்பதால் பொதுமக்கள் குறிப்பாக, இல்லத்தரசிகளான பெண்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியிருக்கின்றனர். 
 
பேரிடர் சூழலில் புதிய புதிய விலை உயர்வு நெருக்கடிகளை மக்கள் மீது திணிக்காமல் இருப்பதே ஆட்சியாளர்களுக்கு உள்ள கடமையும் பொறுப்புமாகும். எனவே, மத்திய அரசு உடனடியாக விலையேற்றம் செய்யப்பட்ட சிலிண்டர் விலையைத் திரும்பப் பெற்று, டிசம்பர் மாதத்திற்கு முந்தைய விலையிலேயே வீடுகளுக்கு விநியோகிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இல்லாவிட்டால், தாய்மார்களின் கோபத்திலிருந்து ஆட்சியாளர்கள் தப்ப முடியாது என கூறியுள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்