கர்ப்பமாக இருக்கும் மனைவி…. மோசமான சாலைகள் – 10 கி.மீட்டர் தோலில் சுமந்த கணவனும் உறவினர்களும் !

புதன், 4 டிசம்பர் 2019 (08:33 IST)
ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலையக கிராமம் ஒன்றில் கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியைப் பிரசவத்துக்காக 10 கி.மீட்டர் தூரம் தோலில் சுமந்து சென்றுள்ளார் ஒரு கணவர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பர்கூர் மலைப்பகுதியில் சுண்டப்பூர் எனும் ஊர் உள்ளது. இந்த ஊருக்கு முறையான சாலைகளோ போக்குவரத்து வசதிகளோ இல்லை என சொல்லப்படுகிறது. வெளியூருக்கு செல்லவேண்டுமென்றால் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று பேருந்து ஏறவேண்டும் என்ற சூழல் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் சாலை இன்னும் மோசமாக மாறியுள்ளது.

அந்த ஊரில் வசிக்கும் மாதேஷ் என்பவரின் மனைவி குமாரிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வாகனங்கள் எதுவும் கிடைக்காததால் அவரைத் தொட்டில் கட்டி கணவர் மாதேஷும் அவரது உறவினர்களும் தூக்கி வந்துள்ளனர். பாதி தூரம் கடந்த நிலையில் ஒரு டாடா ஏசி வண்டி கிடைக்க அதில் ஏற்றிப் பாதி தூரம் சென்றுள்ளனர். ஆனால் குமாரிக்கு வலி அதிகமாகவே வண்டியை நிறுத்திவிட்டு குமாரியின் தாயார் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளார். அப்போது குமாரிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. பின்னர் குழந்தையையும் தாயையும் அழைத்துக்கொண்டு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்