வைரஸ் காய்ச்சல்; பள்ளிகளுக்கு விடுமுறையா? – அமைச்சர் விளக்கம்!

வியாழன், 16 மார்ச் 2023 (12:29 IST)
தமிழ்நாட்டில் இன்ப்ளூயன்சா காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.

சமீப காலமாக இந்தியா முழுவதும் இன்ப்ளூயன்சா வைரஸின் எச்3என்2 பாதிப்புகள் வேகமாக அதிகரித்துள்ளன. நாடு முழுவதும் பல மாநிலங்களில் பரவியுள்ள இந்த இன்ப்ளூயன்சா காய்ச்சலால் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்நிலையில் புதுச்சேரியில் வைரஸ் காய்ச்சல் காரணமாக பள்ளிகளுக்கு 10 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் இன்ப்ளூயன்சா காய்ச்சல் பரவல் உள்ள நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்ற கேள்வி இருந்து வருகிறது.

இந்நிலையில் சென்னை ஐஐடியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த கேள்விக்கு விடை அளித்துள்ளார். அதில் அவர் “தினம்தோறும் வைரஸ் காய்ச்சலுக்கான முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நடமாடும் மருத்துவ வாகனங்கள் மூலம் முகாம்கள் நடத்தப்படுகிறது. இதுவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காகவோ, தீவிர பிரிவிலோ யாரும் அனுமதிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

இதை பெரிதுபடுத்தி மக்களை பதற்றமடைய செய்ய வேண்டாம் என கூறியுள்ள அவர், வைரஸ் காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய சூழல் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்