இந்தியா முழுவதும் இன்ப்ளூயன்சா காய்ச்சல்! – மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்!

ஞாயிறு, 12 மார்ச் 2023 (11:41 IST)
இந்தியாவில் இன்ப்ளூயன்சா எச்3என்2 காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் இன்ப்ளூயன்சா வைரஸின் எச்3என்2 வகை பாதிப்பு வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மருத்துவமனைகளில் மக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மத்திய சுகாதாரத்துறை தகவலின்படி கடந்த ஜனவரியில் 1,245 பேருக்கும், பிப்ரவரியில் 1,307 பேருக்கும் இன்ப்ளூயன்சா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் இதுவரை 486 பேருக்கு இன்ப்ளூயன்சா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ள மத்திய சுகாதாரத்துறை இந்த வைரஸ் பாதிப்பினால் காய்ச்சல், சளி, இருமல் ஆகிய அறிகுறிகள் தோன்றும் எனவும், வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு இன்ப்ளூயன்ஸா பாதிப்புகள் அதிகமாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. இந்த அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சானிட்டைசர் கொண்டு கைகளை கழுவுதல் ஆகிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்