40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறதா தேமுதிக? விருப்பமனு விநியோகம் தொடக்கம்!

Prasanth Karthick

ஞாயிறு, 17 மார்ச் 2024 (14:41 IST)
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் போட்டியிட விருப்பமனுக்களை பெறத் தொடங்கியுள்ளது தேமுதிக தலைமை.



நாடாளுமன்ற தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முழுவீச்சில் செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில் இன்னும் தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கிறது என்பது குறித்து உறுதியாகாமல் உள்ளது. அதிமுகவுடன் கூட்டணி அமையவே சாத்தியம் என கூறப்படுகிறது.

எனினும் கூட்டணி குறித்த இழுபறிக்கு நடுவே விருப்பமனு விநியோகத்தை தேமுதிக தலைமை தொடங்கியுள்ளது. இதுகுறித்து தேமுதிக தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், புதுச்சேரி உட்பட தமிழகத்தின் 40 தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் தேமுதிகவினர் தங்களது விருப்ப மனுக்களை மார்ச் 19ம் தேதி காலை 11 மணி முதல் மறுநாள் மார்ச் 20ம் தேதி மாலை 5 மணிக்குள் தலைமை கழகத்தில் ஒப்படைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

ALSO READ: அவர் 28 பைசா மோடின்னா.. நீங்க என்ன Drug உதயநிதியா? – வானதி சீனிவாசன் கண்டனம்!

மேலும் பாராளுமன்ற பொது தொகுதிக்கான விருப்ப மனு கட்டணமாக ரூ.15 ஆயிரம் ரூபாயும், தனித் தொகுதிக்கான விருப்பமனு கட்டணமாக ரூ.10 ஆயிரமும் செலுத்தி விருப்பமனுக்களை பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

கூட்டணி அமைந்தால் கிடைக்கும் தொகுதிகளில் விருப்பமனு அளித்தவர்களில் ஒருவரை தேர்வு செய்து போட்டியிடலாம் என்றும், அதிமுக, பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் சுமூக நிலை ஏற்படாத பட்சத்தில் தனித்து நின்று போட்டியிடும் முனைப்புடன் தேமுதிக முன் தயாரிப்பாக செயல்பட்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக் கொள்ளப்படுகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்