இதுல அதிமுகவுக்கு சம்பந்தம் இருக்குன்னு அப்பவே சொன்னோம்! – கனிமொழி ட்வீட்!

புதன், 6 ஜனவரி 2021 (09:18 IST)
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுகவை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டிருப்பது குறித்து கனிமொழி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2019ம் ஆண்டு பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அதில் சிலர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு சிபிஐ கைக்கு மாற்றப்பட்டது.

சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் தற்போது மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் அதிமுக பொள்ளாச்சி மாணவர் அணி நகர செயலாளர் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதை குறிப்பிட்டு ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக எம்.பி கனிமொழி “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை, திமுக தொடர்ந்து சொல்லி வந்துள்ளது. திமுகவின் கூற்று உண்மை என்பதை இன்று, மாணவர் பிரிவின் பொள்ளாச்சி நகர செயலாளரையும், மேலும் இரு அதிமுகவினரையும், சிபிஐ இவ்வழக்கில் கைது செய்துள்ளது உறுதி செய்துள்ளது. எடப்பாடி அரசிடம் இவ்வழக்கு விசாரணை தொடர்ந்திருந்தால் இந்த கைதுகள் நடந்திருக்குமா ?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் கட்சியில் உள்ள ஒருவர் குற்றசெயல் ஒன்றில் தொடர்புப்பட்டிருப்பதால் மொத்த கட்சியையும் அதனுடன் இணைத்து பேசுவது சரியல்ல என அதிமுக தரப்பிலும் பேசப்பட்டு வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்