கட்டாயப்படுத்தி, மிரட்டி கடனை வசூலித்தால் சிறைத்தண்டனை! - தமிழக அரசு அதிரடி!

Prasanth Karthick

செவ்வாய், 29 ஏப்ரல் 2025 (15:33 IST)

கடன் பெற்றவர்களிடம் கட்டாயப்படுத்தி மிரட்டி கடன் வசூலிப்பவர்கள் மீது சிறைத்தண்டனை உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் புதிய மசோதா தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

 

தமிழ்நாடு முழுவதும் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் பல புற்றீசல் போல கிளம்பியுள்ள நிலையில் ஏராளமான மக்களை தேடி சென்று அவர்களே கடன் கொடுப்பதும் அதிகரித்துள்ளது. வங்கி கடனில் உள்ள ஆவணம் சரிபார்த்தல், கால தாமதம் போன்றவை இல்லாததால் மக்களும் அவசரம் கருதி பைனான்ஸ் நிறுவனங்களில் கடன் பெறுகிறார்கள்.

 

இந்நிலையில் பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள், கடன் வாங்கியவர்களிடம் மோசமாக நடந்து கொள்வதும், சுவற்றில் கடனை எழுதி வைப்பதும், மிரட்டுவதும் என பல குற்றச்சாட்டுகள் வருகின்றன. இதுகுறித்து கட்டாய கடன் வசூல் தடுப்பு மசோதாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் ஏற்கனவே தாக்கல் செய்திருந்தார்.

 

இன்று அந்த மசோதா ஒருமனதாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் பணக்கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் பெற்றவர்களிடம் வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3 ஆண்டு சிறைத்தண்டனை, ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க இந்த புதிய மசோதா வகை செய்கிறது.

 

மேலும் கடன் பெற்றவர்கள் கடன் நிறுவனங்களின் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டால், கடன் வழங்கிய நிறுவனங்கள் அவர்களை தற்கொலைக்கு தூண்டியதாக கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு பிணையில் வர முடியாத சிறை தண்டனை வழங்கப்படும் என பல அம்சங்கள் அந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்