அடுத்த டார்கெட் நெடுஞ்சாலை அதிகாரிகள்? : வருமான வரித்துறையினர் அதிரடி

வெள்ளி, 20 ஜூலை 2018 (10:03 IST)
நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்களிடம் சோதனை நடைபெற்று வரும் வேளையில், வருமான வரித்துறையினரின் அடுத்த இலக்கு நெடுஞ்சாலை துறையில் பணிபுரியும் அதிகாரிகள் என செய்திகள் வெளிவந்துள்ளது.

 
நெடுஞ்சாலை துறை தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் முதல்நிலை ஒப்பந்ததாரர் செய்யாதுரை வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.163 கோடி பணமும், 100 கிலோ தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுபோக பல ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.  
 
மேலும், செய்யாதுரையின்  எஸ்.பி.கே. நிறுவனத்தில் பங்குதாரராக உள்ளவரும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சம்பந்தியுமான சுப்பிரமணியை வருமான வரித்துறையினர் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். 4வது நாளாக நேற்றும் சோதனை நடந்தது. இது எடப்பாடி பழனிச்சாமிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதபோல் பல அரசு ஒப்பந்ததாரர்களிடம் சோதனை நீண்டு கொண்டிருக்கிறது.
 
இந்நிலையில், நெடுஞ்சாலை துறையில் பணிபுரியும் அதிகாரிகளை வருமான வரித்துறையின் குறி வைக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஏனெனில், லஞ்ச பணங்களை ஒப்பந்ததாரர்களிடம் பெற்று, தனக்கு வேண்டியதை எடுத்துக்கொண்டு, அரசியல்வாதிகளிடம் பத்திரமாக கொண்டு சேர்க்கும் வேலையை அதிகாரிகள்தான் செய்து வருகிறார்கள் என்கிற தகவல் வருமான வரித்துறையினருக்கு கிடைத்துள்ளதாம். 
 
இதையடுத்து, அரசியல்வாதிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் ஆகியோருக்கு நடுவில் பாலமாக செயல்படும் 25க்கும் மேற்பட்ட அதிகாரிகளின் லிஸ்ட் வருமான வரித்துறையின் இருப்பதாகவும், அவர்களிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் எனவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
 
ஆளும் தரப்பை குறி வைத்து, ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் என வருமான வரித்துறை சோதனைகளை தொடர்ந்து கொண்டு செல்வது அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளதாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்