வாக்களித்த 2 லட்சம் பேருக்கு நன்றி – ஹெச் ராஜா நெகிழ்ச்சி !

வெள்ளி, 24 மே 2019 (16:30 IST)
சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட தோற்றுள்ள ஹெச் ராஜா தனக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.

17 ஆவது மக்களவைத் தேர்தலின் முடிவுகள் பாஜக தனிப்பெரும்பாண்மையோடு அளவுக்கு வெற்றியைப் பெற்று ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.  பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 350 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. காங்கிரஸ் 52 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெறாமல் தத்தளித்துக்கொண்டு இருக்கிறது.

ஆனால் தமிழகத்தில் பாஜக கூட்டணி மண்ணைக் கவ்வியுள்ளது. அதிமுக – பாமக – தேமுதிக  என வலுவான கூட்டணி அமைத்தும் அவர்களால் ஒருத் தொகுதிக்கு மேல் வெற்றி பெறமுடியவில்லை. இதில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக அனைத்திலும் மண்ணைக் கவ்வியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சிவகங்கை தொகுதியில் ஹெச் ராஜா 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளார்.

இதில் கார்த்திக் சிதம்பரம் 5,66,104  வாக்குகளும் ஹெச் ராஜா 2,33,860 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதையடுத்து மீண்டும் பாஜக ஆட்சியமைக்க உறுதுணையாய் வாக்களித்த மக்களுக்கு நன்றியை டிவிட்டரில் தெரிவித்துள்ளார். அவரது டிவிட்டில் ‘நடந்து முடிந்த தேர்தலில் மகத்தான வெற்றியை அளித்து மீண்டும் மோடிஜின் ஆட்சி அமைய வாக்களித்த வாக்களித்த மக்களுக்கு நன்றி. சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் எனக்கு வாக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்