காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை

புதன், 24 ஜனவரி 2018 (12:02 IST)
துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த எரகுடியை சேர்ந்தவர் கண்ணன், இவரது மகன் குருசங்கர்(22). துறையூரில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வருகிறார்.


இவருக்கும் அதே ஊரைச்சேர்ந்த உறவினர் பெண் சரண்யாவும்(19) காதலித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த 22 தினங்களுக்கு முன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடந்தது. சரண்யா புத்தனாம்பட்டியில் உள்ள ஒரு கலைக்கல்லூரியில் 2ம் ஆண்டு கணிதம் படித்து வருகிறார். திருமணத்திற்கு பின்னர் இருவரும் கல்லூரிக்கு சென்று வந்தனர்.
 
இந்நிலையில் இன்று காலை சரண்யா, கணவன் வீட்டில் படுக்கையில் இறந்து கிடந்தார். அவரது இடது கை, கழுத்தில் பிளேடால் அறுக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்து ரத்தம் அதிகம் வழிந்திருந்தது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் போலீசார் சென்று மாணவி சரண்யாவின் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.  அவரின், கணவர் குருசங்கரிடம் விசாரணை நடந்து வருகிறது.
 
சரண்யாவே தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது அவரின் கணவரே கழுத்தை அறுத்தாரா என பல கோணங்களில் விசாரணை நடக்கிறது. இது குறித்து முசிறி ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது. பிரேத பரிசோதனைக்காக சடலம் துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்