புதிய பறவைகள் சிறகடிக்க நினைக்கின்றன - ரஜினி, கமலை வாறிய ஸ்டாலின்

புதன், 24 ஜனவரி 2018 (10:42 IST)
அரசியலுக்கு வருவதாய் அறிவித்துள்ள நடிகர்கள் ரஜினி மற்றும் கமல்ஹாசனை மறைமுகமாக ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார்.

 
அடுத்து நடக்கும் சட்டமன்ற தேர்தலில் தான் அரசியல் கட்சி தொடங்கி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் போட்டியிடவுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் ஏற்கனவே அறிவித்துவிட்டார். எனவே, அவரது ரசிகர்களை ஒருங்கிணைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது.
 
அதேபோல், நடிகர் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21ஆம் தேதி அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரஜினி பாணியில் ரசிகர்களை கடந்த இரண்டு நாட்களாக கமல் சந்தித்து வருகிறார். 
 
நடந்து வரும் அதிமுக ஆட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கும் நிலையில், அடுத்த வாய்ப்பு திமுகவிற்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஜினி மற்றும் கமல்ஹாசனின் அரசியல் பிரவேசம் திமுகவின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. 

 
இந்நிலையில், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டுருந்தார். அதில், அரசியல் தட்பவெப்பம் அறிந்து, புதிய புதிய பறவைகள் சிறகடிக்க நினைக்கின்றன. ஜனநாயகம் என்பது எல்லாருக்குமான வானம். எந்தப் பறவையின் சிறகுகளுக்கு எவ்வளவு வலு இருக்கிறதோ அதற்கேற்ப சிறகடித்துப் பறந்து, அதன்பின் பாதை தெரியாமல் பயணம் தடைப்பட்டு ஓய்வெடுப்பதை அரசியல் களம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது” எனக் குறிப்பிட்டிருந்தார்.
 
அரசியல் நடவடிக்கைகளில் களம் இறங்கியுள்ள ரஜினி மற்றும் கமல்ஹாசனை ஆகியோரைத்தான் ஸ்டாலின் இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் எனத் தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்