வழக்கமாக பண்டிகை மற்றும் விழா நாட்களில் கோயம்பேட்டில் காய்கறி, பழம் மற்றும் மலர்களின் விலையில் ஏற்றம் காணப்படும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை பங்குனி உத்திரம் கொண்டாடப்படுவதால், பூக்களுக்கு தேவை அதிகரித்து, அதன் விலையும் கடந்த சில நாட்களாக அதிகரித்து இருந்தது.
சமீபத்தில் ஒரு கிலோ மல்லிகை ரூ.400க்கு விற்பனையாகியிருந்த நிலையில், தற்போது அது ரூ.600க்கு விற்கப்படுகிறது. அதேபோல், ஐஸ் மல்லிகை ரூ.200-இல் இருந்து ரூ.300க்கு, முல்லை ரூ.400-இல் இருந்து ரூ.750க்கு, ஜாதி மல்லி ரூ.450-இல் இருந்து ரூ.750க்கு உயர்ந்துள்ளன. மேலும், கனகாம்பரம் ரூ.500, சாமந்தி ரூ.180, சம்பங்கி ரூ.240, அரளிப்பூ ரூ.350, சாக்லேட் ரோஜா ரூ.160, பன்னீர் ரோஜா ரூ.120 என விற்பனை நடைபெற்று வருகிறது.
பண்டிகையையொட்டி விலை உயர்ந்திருப்பதால் விவசாயிகளும், வியாபாரிகளும் சந்தோஷமாக உள்ளனர். பங்குனி உத்திரம் முடிந்ததும், விலை மீண்டும் கட்டுக்குள் வரும் என வியாபாரிகள் எதிர்பார்க்கிறார்கள்