பல ஆண்களுடன் உல்லாசம்.! கல்யாண ராணி சத்யா மீது ஆன்லைனில் குவியும் புகார்..!!

Senthil Velan

திங்கள், 15 ஜூலை 2024 (16:19 IST)
கல்யாண ராணி சத்யாவால் பாதிக்கப்பட்ட ஆண்கள் பலர் ஆன்லைன் மூலம் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். இதுவரை 20க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் உடுமலை சாலையில் பேக்கரி மற்றும் விதை விற்பனை நிறுவனங்கள் நடத்தி வருபவர் அரவிந்த் (34). இவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் வரன் தேடி வந்தனர். பல இடங்களில் வரன் தேடியும் கிடைக்காததால், ஆன்லைன் செயலி மூலம் வரன் தேடினர். 
 
அப்போது ஈரோடு மாவட்டம், கொடுமுடி அருகே ஒத்தக்கடையை சேர்ந்த பழனிசாமியின் மகள் சத்யா (40) என்ற பெண் அறிமுகமானார். தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், நாம் நண்பர்களாக பழகுவோம் என்றும் கூறி அரவிந்திடம் சத்யா பழகி வந்துள்ளார்.
 
பின்னர் இருவருக்கும் இருந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்பு சில நாட்களுக்கு பிறகு  சத்யா நகை, பணத்திற்காக பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்தவர் என்ற தகவல் அரவிந்திற்கு தெரியவந்தவுடன் அதிர்ச்சி அடைந்தார். இதைத் தொடர்ந்து தனது வழக்கறிஞர் செல்வக்குமார் மூலம் தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அரவிந்த் புகார் அளித்தார்.

சத்யா கைது:

அந்த புகாரின் பேரில் சத்யாவை பிடிக்க காவல் ஆய்வாளர் கீதா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் சத்யாவையும், கல்யாண புரோக்கர் தமிழ்ச்செல்வியையும் தேடி வந்தனர். அப்போது அவர்களது செல்போன் சிக்னல் புதுச்சேரியை காட்டியது.

இதையடுத்து தனிப்படை போலீசார் புதுச்சேரி சென்று அங்கு தோழியின் வீட்டில் பதுங்கி இருந்த சத்யாவை பிடித்து தாராபுரம் அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில், சத்யா கூறிய திடுக்கிடும் தகவல்களை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அதிர்ச்சி வாக்குமூலம்:
 
சத்யா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே சென்னையை சேர்ந்த அருண் என்பவரையும் காதலித்து ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அவருடன் சில நாட்கள் குடும்பம் நடத்தி விட்டு அடுத்து கரூரைச் சேர்ந்த போலீஸ்-சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக்கை காதலித்து கரம் பிடித்தார். 
 
பின்னர் சப்-இன்ஸ்பெக்டரையும் உதறி தள்ளிவிட்டு, அடுத்ததாக மாட்டு வியாபாரி ராஜமாணிக்கத்தின் மகன் பிரகாசை ஏமாற்றி பணம் பெற்றுள்ளார். அதோடு நிற்கவில்லை, 2012-ம் ஆண்டு ராஜேஷ் என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார். அதன்விளைவாக இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.
 
இந்த நிலையில் தான் செல்போன் செயலி மூலம் தாராபுரத்தை சேர்ந்த பேக்கரி உரிமையாளரிடம் பழகி அவரை தன் அழகில் மயக்கி திருமணம் செய்து சில நாட்கள் குடும்பம் நடத்தி விட்டு ஓட்டம்பிடித்ததாக போலீசார் தெரிவித்தனர். 

தனிமையில் உல்லாசம்:
 
மேலும் மேட்ரிமோனியில் பதிவு செய்துள்ள செல்போன் நம்பர் மூலம் தன்னை தொடர்பு கொள்ளும் ஆண்களை, சத்யா தனிமையில் சந்தித்து பேசி உள்ளார். அப்போது தன்னுடைய அழகில் அவர்களை மயக்கி, பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். 

ஆபாச  வீடியோ:
 
ஓட்டலில் ரூம் எடுத்து தங்கி உல்லாசமாக இருக்கும்போது, சத்யா அதனை ரகசிய கேமரா மூலமும் வீடியோ எடுத்து வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. பிறகு அந்த ஆபாச  வீடியோவை காண்பித்து, தன்னிடம் உல்லாசமாக இருந்த ஆண்களிடம் நகை-பணம் பறித்து வந்துள்ளார்.

இது தவிர அடிக்கடி செலவுக்கு ரூ.10 ஆயிரம், 20ஆயிரம் என்று அவர்களிடமே கேட்டு வாங்கி வந்துள்ளார்.. ஆபாச வீடியோ சத்யாவிடம் உள்ளதால்,  பயந்துபோன பலரும், சத்யா கேட்கும் பணத்தை தந்து வந்திருக்கிறார்கள். அதேபோல, திருமணம் ஆன ஆண்களின் குடும்பத்தினரும், தங்கள் மானம் போய் விடும் என்ற பயத்தில், சத்யா கேட்டபோதெல்லாம் பணத்தை வாரி வழங்கியுள்ளனர். இதனால் சத்யாவால் பாதிக்கப்பட்ட பல குடும்பத்தினர் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாக தெரிகிறது. 

சத்யா மீது குவியும் புகார்:
 
தற்போது சத்யா போலீஸ் பிடியில் சிக்கியுள்ள நிலையில் அவரால் பாதிக்கப்பட்ட ஆண்கள் பலர் ஆன்லைன் மூலம் தாராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்து வருகின்றனர். இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் சத்யா மீது புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. சத்யா மீது நடவடிக்கை எடுப்பதுடன், தாங்கள் கொடுத்த நகை-பணத்தை மீட்டு தருமாறும் அந்த புகாரில் கேட்டுக் கொண்டுள்ளனர். 

அதன் அடிப்படையில் சத்யாவிடம் விசாரணை நடத்தி, அவரிடமிருந்து நகை-பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் தற்போது போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர் பயன்படுத்திய செல்போன்களில் ஆபாச படங்கள் இருக்கிறதா என்றும் ஆய்வு செய்து வருகின்றனர். விசாரணையில் சத்யாவிடம் இருந்து மேலும் பல தகவல்கள் வெளியாகலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்