தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு : பலியானவருக்கு சம்மன் அனுப்பிய விசாரணை ஆணையம்

புதன், 22 ஆகஸ்ட் 2018 (12:23 IST)
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம், அதில் பலியான ஒருவருக்கு சம்மன் அனுப்பியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 
கடந்த மே மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் பேரணி நடத்திய போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 13 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். சீருடை அணியாத போலீசார் மக்களை நோக்கி சுடும் வீடியோக்கள் வெளியாகி தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
இந்த நிகழ்வு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அருணா ஜெகதீசன் துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களில் ஒருவரான கிளாஸ்டன் என்பவருக்கு சம்மன் அனுப்பியுள்ளார். அதில் வருகிற 29ம் தேதி காலை 10 மணிக்கு நீங்கள் ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
மக்கள் பலியானது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணை ஆணையம், பலியான ஒருவருக்கே சம்மன் அனுப்பியுள்ளது சமூக வலைத்தளங்களில் கிண்டலுக்கும், தூத்துக்குடி மக்களின் அதிருப்திக்கும் ஆளாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்