பொதுசெயலாளராக நீடிக்க என்ன வழி? – மேல்முறையீடு செய்ய எடப்பாடியார் திட்டம்!

வியாழன், 18 ஆகஸ்ட் 2022 (09:11 IST)
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் இன்று மேல்முறையீடு செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதிமுக ஒற்றைத் தலைமை குறித்து ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்த நிலையில் ஜூன் 23ம் தேதி நடந்த பொதுக்குழு கூட்டம் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் முடிவடைந்தது.

அதை தொடர்ந்து ஜூலை 11ல் மீண்டும் நடத்தப்பட்ட பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் இடைக்கால பொதுசெயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டனர்.

இதை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு கூட்டம் மற்றும் மேற்கொண்ட தீர்மானங்கள் யாவும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக தொடர்ந்து இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக வெளியாகியுள்ள இந்த உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று முதலாக சட்ட வல்லுனர்கள் மட்டும் அதிமுக நிர்வாகிகளோடு எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்