திமுக ஆட்சியில் விளம்பரத்திற்கு முக்கியத்துவம், கல்விக்கு பாராமுகமா? நயினார் நாகேந்திரன்

Siva

செவ்வாய், 10 ஜூன் 2025 (14:40 IST)
தகுதித் தேர்வில் வென்ற இடைநிலை ஆசிரியர்களுக்குப் பணி நியமனம் வழங்காமை, போதிய வகுப்பறை வசதியின்மை, மாணவர்களைக் கல்வித்துறையைச் சீரழிக்கும் வகையில், தற்போது அரசுப் பள்ளிகளில் 20,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
 
இது போதாததற்கு, 4,000க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் பற்றாக்குறை, 4,000 உதவிப் பேராசிரியர்களுக்கான தேர்வு நடத்தப்படாமை, துணை வேந்தர் நியமனத்தில் இழுபறி, பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பள பாக்கி, பல்கலைக்கழகத்தில் நிதி பற்றாக்குறை, வினாத்தாள் கசிவு, பல்கலைக்கழக மறுசீரமைப்பு என உயர்கல்வித்துறையும் சீரழிந்து வருவது தமிழகத்தின் எதிர்காலம் குறித்த அச்சத்தையும் கிளப்புகிறது.
 
ஒரு காலத்தில் ஆன்றோர்களால் "கல்வியிற் சிறந்த தமிழ்நாடு" எனப் போற்றப்பட்ட மாநிலம், தற்போது புகார்களின் கூடாரமாகி, படிக்கும் மாணவர்கள் மற்றும் படித்து முடிந்த பட்டதாரிகள் என அனைவரின் எதிர்காலத்தையும் ஒரு சேர அழிக்கிறது. "கல்வியில் சீரழிந்த தமிழ்நாடாக திராவிட மாடல் அரசு உருமாற்றி வருவது மிகவும் கொடுமையானது.
 
ஆனால் இவற்றை எல்லாம் கண்டுகொள்ளாதது, 'அப்பா, பல்கலை வேந்தர்' எனத் தினந்தோறும் புதிய பட்டங்களைப் பெறும் சூழலில், கல்வித்துறையில் தொடர்ந்து எழுந்து வரும் புகார்களை அலட்சியம் செய்து,  விளம்பரங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார் முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள். "ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக 19,268 பணியிடங்கள் 18 மாதங்களில் நிரப்பப்படும்" என்று சட்டப்பேரவையில் முதற்கண் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவும் ஒரு அறிகுறி கூட திமுக ஆட்சியில் தென்படவில்லை என்பதே உண்மை.
 
நூற்றுக்கு நூறு சதவீதம் எல்லா நன்மையையும் முன்னேற்றமும் தனது குடும்பத்திற்கு கிடைக்க வேண்டும் என காட்டும் அக்கறையை, நம் தமிழக மாணவர்கள் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று கல்வியில் சிறந்து விளங்கவும், பட்டதாரி இளைஞர்கள் அரசு வேலை பெற்று வாழ்வில் முன்னேறுவதற்கும் காட்ட வேண்டும் என முதல்வர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்