கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், பாஜக சார்பில் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட நடிகை கௌதமி விரும்பினார். ஆனால் அந்த தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது என்பதும், அந்த தொகுதியில் அப்போது அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், 2026 ஆம் ஆண்டு மீண்டும் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட கௌதமி முயற்சித்து வரும் நிலையில், தற்போது அவர் அதிமுகவில் இருப்பதால், அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், இன்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வருகை தந்த கௌதமி, செய்தியாளர்களிடம் சந்தித்தார். அப்போது, "தமிழக மக்களுக்கு பாதுகாப்பான ஆட்சி கிடைக்க வேண்டும் என்று ஆண்டாள் தாயாரிடம் வேண்டிக் கொண்டேன். திமுக ஆட்சியை வீழ்த்தப்பட வேண்டும். கடந்த தேர்தலின் போது, ராஜபாளையம் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு சிறப்பாக சேவை செய்தேன். அதே தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தான் முடிவு செய்வார்," என்று கூறினார்.
"40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் தான் உள்ளேன். புற்றுநோய் விழிப்புணர்வு, கல்வி உள்ளிட்ட பல விஷயங்களை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தித் தருகிறேன். தமிழகத்தை காப்பாற்ற வேண்டுமென்றால், அதிமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும்," என்றும் தெரிவித்தார்.