தேனி மாவட்டத்தில் சமுதாய நலக்கூடத்தைத் திறந்து வைத்துப் பேசிய ஆண்டிப்பட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன், "மக்கள் மனங்களை அறிந்து செயல்படுபவர் முதல்வர் ஸ்டாலின் என்றும், பல்வேறு மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார் என்றும்," தெரிவித்தார். மேலும், "மகளிர் அனைவரும் அரசுப் பேருந்தில் ஓசியில் தேனி, ஆண்டிப்பட்டி, உசிலம்பட்டி என பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்து வேலை செய்யுங்கள்; வீட்டில் உள்ள ஆண்கள் சமையல் வேலை செய்யட்டும்," என்று பேசினார்.
"மகளிரை ஓசி" என விமர்சித்த எம்எல்ஏவின் பேச்சு பெரும் சர்ச்சையாகியுள்ள நிலையில், தமிழக பாஜக தலைவர் நைனார் நாகேந்திரன் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். "மகளிரை ஓசி என திமுக எம்எல்ஏ விமர்சனம் செய்திருப்பது கண்டனத்துக்குரியது என்றும், ஏற்கனவே அமைச்சர் பொன்முடி இதேபோன்று தரம் தாழ்ந்து விமர்சனம் செய்த நிலையில், தற்போது இன்னொரு எம்எல்ஏவும் விமர்சனம் செய்கிறார் என்றும், பெண்களை கொச்சையாகப் பேசி வருகிறார் என்றும்," தெரிவித்துள்ளார். "அதிகார மமதையில் எளிய மக்களை இழிவாகவும் ஏளனப்படுத்தியும் வரும் திமுக அரசு இனியாவது திருந்த வேண்டும்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.