எடப்பாடி அரசுக்கு திமுக வைத்த செக் - நீதிமன்றத்தில் வழக்கு

திங்கள், 25 செப்டம்பர் 2017 (13:07 IST)
துணை முதல்வர் ஓ.பி.எஸ் உட்பட 12 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என திமுக தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.


 

 
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராகவும், தினகரனுக்கு ஆதரவாகவும் இருக்கும் 18 எம்.எல்.ஏக்களை சமீபத்தில் சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். 
 
இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து, தினகரன் தரப்பு சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், தகுதி நீக்கத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. ஆனால், 18 தொகுதிகளில் தேர்தலை அறிவிக்கக் கூடாது என்று மட்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், அந்த வழக்கு வருகிற அக்டோபர் 4ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. 
 
அதேநேரம், நம்பிக்கை வாக்கெடுப்பின் மீது அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உள்ளிட்ட 12 எம்.எல்.ஏக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், ஓ.பி.எஸ் அணி தற்போது எடப்பாடி அணியுடன் இணைந்து விட்டது. 
 
இந்நிலையில், திமுக கொறடா சக்கரபாணி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில், நம்பிக்கை வாக்கெடுப்பின் போது முதல்வர் பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உட்பட 12 எம்.எல்.ஏக்களை, கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ்  பதவி நீக்கம் செய்ய வேண்டும் என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
அதாவது, இந்த மனு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு சபாநாயகருக்கும், முதல்வர் எடப்பாடிக்கும் நீதிமன்றம் உத்தரவிடும். அப்போது அளிக்கப்படும் விளக்கத்தில் அவர்களின் இரட்டை முகம் வெளிச்சத்திற்கு வரும். அதை வைத்து நீதிமன்றத்தில் அவர்களை மடக்கலாம் என திமுக திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்