தாஜ்மஹால் இந்து கோவில் விவகாரம்; வழக்கு ஏற்கப்பட்டதால் லட்டு வழங்கி கொண்டாட்டம்!

செவ்வாய், 10 மே 2022 (15:26 IST)
தாஜ்மஹாலில் மூடப்பட்டுள்ள 22 அறைகளை திறந்து பார்த்து தொல்லியல் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கோரிய மனு நீதிமன்றத்தில் ஏற்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள ஆக்ரா பகுதியில் அமைந்துள்ள தாஜ்மஹால் முகலாய மன்னர் ஷாஜகான் காலத்தில் கட்டப்பட்டதாகும். உலக அளவில் காதல் சின்னமாக போற்றப்படும் தாஜ்மஹாலை காண உலகம் முழுவதிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்நிலையில் தாஜ்மஹால் இருந்த இடத்தில் முன்பு ஒரு சிவன் கோவில் இருந்ததாகவும், அதை இடித்து அந்த பகுதியில் தாஜ்மஹால் கட்டப்பட்டதாகவும் நீண்ட காலமாக இந்துத்துவ அமைப்புகள் பல பேசி வருகின்றன. மேலும் தாஜ்மஹாலில் மூடப்பட்டுள்ள 22 அறைகளில் முந்தைய சிவன் கோவிலில் இருந்த சிலைகள் உள்ளிட்டவை இருப்பதாகவும் அவர்கள் நம்புகின்றனர்.

எனவே தாஜ்மஹாலில் திறக்கப்படாமல் உள்ள 22 அறைகளை திறந்து அறிக்கை தாக்கல் செய்ய தொல்லியல் ஆய்வு துறைக்கு உத்தரவிட வேண்டும் என அயோத்தி பாஜக செய்தி தொடர்பாளர் அலகாபாத் நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

இந்த மனுவை அலகாபாத் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. இதை கொண்டாடும் விதமாக இந்து அமைப்பினர் சிலர் தாஜ்மஹால் உள்ள பகுதியில் இனிப்புகள் வழங்கியுள்ளனர். அதற்கு தடை விதித்த போலீஸார் இனிப்புகள் வழங்க கூடாது என திருப்பி அனுப்பியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்