திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜ், நெல்லை மாவட்டத்திற்கு செல்ல இப்போதும் அச்சம் நிலவுவதாக கூறியது குறித்து, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் காட்டமான பதிலளித்துள்ளார்.
இது குறித்து பேசிய நயினார், “மாரி செல்வராஜ் எந்த அடிப்படையில் இப்படி சொல்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. ஒவ்வொருவரின் பார்வையும் வேறு வேறாக இருக்கும். திருநெல்வேலி ஒரு அமைதியான மாவட்டம். இங்கு அனைத்து சமூகத்தினரும் சமமாக வாழ்கிறார்கள்,” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதியில் நான் சார்ந்த சமூகம் அதிகம் கிடையாது. இருப்பினும், அனைத்து சமூகத்தினரும் எனக்கு ஓட்டு போடுகின்றனர். இங்கு சாதிப் பாகுபாடு இல்லை. எனவே, சமூகத்தில் ஒற்றுமையை குலைக்கும் வகையில், சாதி ரீதியிலான பிரச்னைகளைப் படமாக எடுப்பது சரியல்ல,” என்று இயக்குநர் மாரி செல்வராஜின் கருத்துக்கும், திரைப்பட பாணிக்கும் மறைமுகமாக நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்தார்.