கோவையில் அமைய உள்ள மெட்ரோ ரயில்- அதிகாரிகள் ஆய்வு...

J.Durai

வியாழன், 4 ஜூலை 2024 (15:34 IST)
சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மற்றும் கோவை மாவட்டத்தில் மெட்ரோ ரயில் 2ம் திட்ட சேவை வரவுள்ளது. 
 
இது குறித்து தமிழக அரசு 2021 ஆம் ஆண்டு  அறிவித்தது. 
 
கோவை மாவட்டத்தில் அவிநாசி சாலை மற்றும் சக்தி சாலை ஆகிய இரண்டு முக்கிய வழித்தடங்களில் இந்த மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அவிநாசி சாலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், லட்சுமி மில்ஸ், நவ இந்தியா, பீளமேடு, கோவை மருத்துவக் கல்லூரி, சித்ரா வழியாக நீலாம்பூர் வரை 20.4 கிமீ தூரத்திற்கு 17 ரயில் நிலையங்களை கொண்டும், சக்தி சாலையில் காந்திபுரம் பகுதியில் துவங்கி கணபதி, ராமகிருஷ்ணா மில்ஸ், விநாயகபுரம், சரவணம்பட்டி, விஸ்வபுரம் வழியாக வளையம் பாளையம் வரை 14.4 கிமீ தூரத்திற்கு 14 ரயில் நிலையங்களை கொண்டும் அமைய இருப்பதாக கடந்த ஆண்டு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
 
இந்த ரயில் வழித்தடங்கள் அனைத்தும் உயர் மட்ட வழித்தடங்களில் அமைய உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
 
இந்நிலையில் இந்தத் திட்டத்தின் இயக்குனர் அர்ஜுனன், ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் மூத்த போக்குவரத்து நிபுணர் வெங்கியூ, சென்னை மெட்ரோ ரயில் திட்ட தலைமை பொதுச் செயலாளர் ரேகா அடங்கிய குழுவினர் கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் மெட்ரோ ரயில் கால முறை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். 
 
உக்கடம் பேருந்து நிலையத்தின் அமைப்பு அங்கு உள்ள மேம்பாலத்தின் அமைப்புகள் ஆகியவற்றை பார்வையிட்ட அவர்கள் மெட்ரோ வழித்தட வரைபடங்களை கொண்டு  ஆய்வு செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்