கட்டிங் போட்டுவிட்டு திருட போன ஆசாமி! – காமெடியாய் முடிந்த திருட்டு சம்பவம்!

ஞாயிறு, 13 டிசம்பர் 2020 (16:24 IST)
சென்னையில் மது அருந்தி விட்டு வீடு ஒன்றில் திருட சென்ற ஆசாமி போலீஸிடம் பிடிபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூரை சேர்ந்த சேகர் மற்றும் ஆனந்தி என்ற தம்பதியினர் சென்னை அருகே நங்கநல்லூரில் தில்லைகங்கா நகரில் வீடு ஒன்றில் தங்கியபடி நிகழ்ச்சிகளுக்கு சமையல் செய்து தரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று காலை சமையல் பணிக்காக சென்ற தம்பதியினர் மாலை நேரத்தில் வீடு திரும்பியுள்ளனர். ஆனால் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அங்கே பீரோ திறக்கப்பட்டு கிடக்க ஆசாமி ஒருவர் மயங்கி விழுந்து கிடந்துள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் போலீஸுக்கு தகவல் அளித்துள்ளனர். உடனடியாக சம்பவ இடம் விரைந்த போலீஸார் மயங்கி கிடந்த நபரை பிடித்து விசாரித்துள்ளனர். விசாரணையில் மயங்கி கிடந்த ஆசாமி ஆலந்தூரை சேர்ந்த நாகராஜ் என தெரிய வந்துள்ளது.

சேகர் வீட்டில் திருட திட்டமிட்ட அவர் திருட்டுக்கு முன்னால் அளவுக்கதிகமாக மது அருந்தியுள்ளார். இதனால் திருட சென்ற இடத்தில் போதை தலைக்கேறி மயங்கி விழுந்துள்ளார் என தெரிய வந்துள்ளது. இதையடுத்து இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்