லியோ படத்திற்கு பாலபிஷேகம் மற்றும் கட் அவுட் வைக்க தடை!

செவ்வாய், 17 அக்டோபர் 2023 (20:24 IST)
கரூரில் லியோ திரைப்படத்திற்கு பிரம்மாண்ட கட் அவுட்டுகள் வைக்கவும், ரசிகர்கள் பாலபிஷேகம் செய்யவும் தடை - கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை தடுக்க சிறப்பு குழு அமைத்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
 
நடிகர் விஜய் நடிப்பில் வருகின்ற 19ஆம் தேதி லியோ திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. லியோ திரைப்படம் வெளியிடுவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
தமிழக அரசின் அரசாணையின் படி, கரூர் மாவட்டத்தில் உள்ள திரையரங்குகளில் லியோ திரைப்படம் கூடுதலாக ஒரு சிறப்பு காட்சி நடத்த மட்டும் அனுமதி அளித்தும், காலை 9.00 மணி முதல் நள்ளிரவு 1:30 மணிக்கு முடிவடையும் நிலையில், நாள் ஒன்றுக்கு ஐந்து காட்சிகள் திரையிட மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்வதை கண்காணிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
 
திரையரங்குகளில் சுகாதார குறைபாடுகள் இல்லாமல் பொதுமக்கள் மற்றும் பார்வையாளர்கள் சிரமம் இன்றி உள்ளே வரவும், வெளியேறவும் போக்குவரத்து வசதிகளை சீராக வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
 
மேலும், திரையரங்குகளுக்கு முன்பு பிரம்மாண்ட கட் அவுட்டுகள் வைக்கவும், ரசிகர்கள் கட் அவுட்டுகள் மீது ஏறி பாலபிஷேகம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திரையரங்கங்கள் விதிமுறைகளுக்கு மாறாக நடந்து கொள்ளும் பட்சத்தில் புகார் தெரிவிக்க வேண்டிய உயர் அலுவலர்களின் விவரங்கள் அடங்கிய பதாகையை திரையரங்கங்கள் முன்பு வைக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் (பொறுப்பு) கண்ணன் அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்