தினகரன் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு அழைப்பு: மீண்டும் கூவத்தூரா?

Webdunia
புதன், 19 ஏப்ரல் 2017 (10:19 IST)
அதிமுகவில் சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்கிய பின்னர் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் சசிகலா தரப்பினால் கூவத்தூர் சொகுசு விடுதியில் சிறை பிடிக்கப்பட்டனர்.


 

 
அதே போல தற்போது சசிகலாவால் நியமிக்கப்பட்ட தினகரனுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், மற்ற அமைச்சர்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் அதிமுகவில் மீண்டும் ஓர் கூவத்தூர் சம்பவம் நடக்கும் சூழல் உருவாகியுள்ளது.
 
ஆட்சியையும், கட்சியையும் காப்பாற்ற டிடிவி தினகரனையும் அவரது குடும்பத்தையும் அதிமுகவில் இருந்து விலக்கி வைக்கிறோம் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அமைச்சர்கள் தெரிவித்தனர். அதே சமையம் இரட்டை இலை சின்னத்தை மீட்க கட்சியை வலுபெற வைக்க ஓபிஎஸ் அணியுடன் இணைய பேச்சுவார்த்தை நடத்தவும் தயார் என கூறினர் அமைச்சர்கள்.
 
அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்து தினகரன் ஒதுக்கப்படும் சம்பவம் அரசியலில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்நிலையில் தினகரனுக்கு ஆதரவாக சில எம்எல்ஏக்கள் கிளம்பியுள்ளனர். இதுவரை 4 எம்எல்ஏக்கள் வெளிப்படையாக தினகரனுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.
 
இந்நிலையில் சென்னை அடையாறில் அவரது வீட்டில் உள்ள தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கட்சியில் தனக்கு எதிர்ப்பும் இல்லை என கூறினார். மேலும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் எங்கள் பக்கம் தான் உள்ளனர் எனவும், விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும் தினகரன் கூறியுள்ளார். இதனையடுத்து இன்று மாலை 3 மணிக்கு அனைத்து அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு தினகரன் அழைப்பு விடுத்துள்ளார்.
அடுத்த கட்டுரையில்