காவல் நிலையத்திலேயே மோதிக்கொண்ட காங்கிரஸ்-அதிமுகவினர்

Webdunia
செவ்வாய், 17 மே 2016 (13:09 IST)
நெல்லித்தோப்பு தொகுதியில் அதிமுகவினர்-காங்கிரஸார் திங்கள்கிழமை மோதிக் கொண்டதில் 3 பேர் பலத்த காயமடைந்தனர். இதன் தொடர்ச்சியாக உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் காவலர்கள் முன்பாகவே இரு தரப்பினர்ரும் மோதிக்கொண்டனர்.
 

 
புதுச்சேரி, நெல்லித்தோப்பு தொகுதி வெண்ணிலா நகரில் உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகர் வாக்குப்பதிவை பார்வையிடச் சென்றார். அப்போது அங்கிருந்த காங்கிரஸ் கட்சியினர் சிலர் அவர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
 
காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமார் தரப்பினர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில் அங்கு வந்த அதிமுகவினரும் காங்கிரஸாரை தாக்கினர். அப்போது அதைத் தடுத்த அதிமுகவைச் சேர்ந்த ஓம்சக்தி சேகர் காவல் நிலையத்தில் புகார் செய்யலாம் எனக் கூறினார்.
 
பிறகு, உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் ஓம்சக்தி சேகர் தரப்பு புகார் கொடுக்கச் சென்றது. அப்போது கற்களை வீசித் தாக்குதல் நடத்திய காங்கிரஸாரும் அங்கிருந்தனராம். இதனால் கொதிப்படைந்த அதிமுகவினர் காவல் நிலையத்திலேயே அவர்களைத் தாக்கினர்.
 
பின்னர், எஸ்எஸ்பி ஞானசம்பந்தன் சம்பவ இடத்துக்கு வந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறி அதிமுகவினரை அனுப்பி வைத்தார். காவல் நிலையம் முன்பு திரண்டிருந்த காங்கிரஸாரையும் விரட்டி அனுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்....
அடுத்த கட்டுரையில்