சசிகலா புஷ்பாவிற்கு எதிராக ஆஜரான வக்கீல் வீடு நாசம்

Webdunia
புதன், 12 அக்டோபர் 2016 (16:18 IST)
மாநிலங்களவை உறுப்பினர் எம்.பி. சசிகலா புஷ்பா மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் வழக்கில், அவருக்கு எதிராக வாதாடுவதற்கு ஆஜரான பெண் வழக்கறிஞரின் வீடு அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
 

 
சசிகலா புஷ்பாவின் வீட்டில் பணிபுரிந்த பானு, ஜான்சிராணி இருவரும், சசிகலாவின் கணவர் லிங்கேஸ்வரன் மற்றும் அவரது மகன் பிரதீப்ராஜா ஆகியோர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காவல் துறையினரிடம் புகார் கூறினார்கள்.
 
இந்த புகாரின் பேரில் புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் துறையினர் சசிகலா புஷ்பா எம்.பி, அவரது கணவர் லிங்கேசுவர திலகன், மகன் பிரதீப் ராஜா, தாய் கவுரி ஆகியோர் மீது, வழக்கு பதிவு செய்தனர்.
 
இந்த வழக்கில், வழக்கறிஞராக பணிபுரிந்து வரும் திசையன்விளை பகுதியைச் சேர்ந்த சுகந்தி (48). என்பவர் ஆஜரானார். மேலும் அவர்கள் இருவரையும் தனது வீட்டில் பாதுகாப்பாக தங்க வைத்திருந்தார்.
 
இந்நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் வக்கீல் வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு, வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை அவர்கள் அடித்து நொறுக்கினர். பின்னர், கதவை உடைத்து உள்ளே சென்ற அந்த கும்பல் அங்கிருந்த பிரிட்ஜ், டி.வி., உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் அடித்து நொறுக்கிவிட்டு அங்கிருந்து அந்த கும்பல் தப்பி சென்றுள்ளது.
 
இந்த சம்பவம் குறித்து வீட்டு காவலாளி, விடுமுறையை காரணமாக குடும்பத்தினருடன் கேரள மாநிலத்திற்கு சுற்றுலா சென்றிருந்த சுகந்திக்கு தகவல் அளித்துள்ளார். இதையடுத்து சுற்றுலா சென்றிருந்த அவர் அவசர அவசரமாக ஊருக்கு திரும்பினார்.
 
இது குறித்து திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்கறிஞர் சுகந்தி புகார் செய்தார். புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்கறிஞர் வீடு அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த கட்டுரையில்