கோவை ஈஷா யோக மையத்திற்கு தைபூசத் திருவிழாவை முன்னிட்டு இன்று (11/02/2025) முளைப்பாரியால் செய்யப்பட்ட லிங்க பைரவி திருவுருவத்துடன் பக்தர்கள் பாதயாத்திரையாக வந்தனர்.
ஈஷாவில் லிங்க பைரவி கடந்த 2010-ஆம் ஆண்டு தைபூசத் நாளன்று சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஆகையால் ஆண்டுதோறும் லிங்க பைரவியின் பிரதிஷ்டை தின விழா தைப்பூசத் திருநாளில் கொண்டாடப்படுகிறது.
அந்த வகையில் ஈஷா யோக மையத்தில் தைபூசத் திருவிழா மற்றும் லிங்க பைரவி பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு, ஈஷாவை சுற்றியுள்ள கிராம மக்கள், பழங்குடியினர் மற்றும் வெளிநாட்டினர் உள்பட நூற்றுக்கணக்கான மக்கள் முளைப்பாரியால் செய்யப்பட்ட லிங்க பைரவி தேவி திருவுருவத்தை பல்லக்கில் ஏந்தி ஊர்வலமாக ஈஷா யோக மையம் வரை பாத யாத்திரையாக வந்தனர்.
ஆலாந்துறைக்கு அடுத்துள்ள கள்ளிப்பாளையம் முதல் ஈஷா வரையிலான 15 கி.மீ தொலைவிற்கு லிங்க பைரவி திருவுருவத்துடன் நூற்றுக்கணக்கான பெண்கள் பெரிய அளவிலான முளைப்பாரிகளை தலையில் சுமந்து பக்தி பரவசத்துடன் பாதயாத்திரையாக வந்தனர்.
இதனுடன் லிங்க பைரவி தேவிக்கு பக்தர்கள் மேற்கொள்ளும் பைரவி சாதனா எனும் ஆன்மீக செயல்முறையின் நிறைவு நிகழ்ச்சியும், மாலையில் லிங்க பைரவி தேவிக்கு அபிஷேக ஆராதனைகளும் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் உலகம் முழுவதிலும் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான தேவி பக்தர்கள் கலந்து கொண்டனர்.