ஜெயலலிதாவால் தூக்கி எறியப்பட்டவர்கள் தற்போது ஒரே அணியில்: திக்.. திக்.. அதிமுக வட்டாரம்!

Webdunia
வெள்ளி, 7 அக்டோபர் 2016 (12:33 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. என்னதான் அறிக்கைகள், பேட்டிகள் வந்தாலும் முதல்வருக்கு என்ன ஆனது என்பது தொண்டர்களுக்கு புதிராகவே உள்ளது.


 
 
முதல்வரின் உடல்நிலை இப்படி இருக்க, கட்சி யாருடைய கட்டுப்பாட்டில் தாற்போது உள்ளது என்பதே பலரின் கேள்வியாக இருக்கிறது. பல லட்சம் உறுப்பினர்களை கொண்ட தமிழகத்தின் மிகப்பெரிய கட்சியாகவும், தேசிய அரசியலில் முக்கிய கட்சியாகவும் உள்ள அதிமுக தற்போது அந்த கட்சியில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத சசிகலாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என பலரும் முணுமுணுக்கின்றனர்.
 
பல்வேறு மூத்த அமைச்சர்கள் இருக்கிறார்கள், கட்சிக்காக பல ஆண்டுகளாக உழைத்தவர்கள் இருக்கிறார்கள் ஆனால் சசிகலா நான்தான் அதிமுக என்பது போல செயல்படுகிறார் என தொண்டர்கள் பலரும் பேசி வருகின்றனர். தமிழகத்தின் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கிறார் அவரை சசிகலா மட்டுமே சந்திக்கிறார், வேறு யாருக்கும் முதல்வரை சந்திக்க அனுமதி மறுக்கின்றனர்.
 
அமைச்சர்கள் யாரும் முதல்வரை பார்க்கவில்லை, அனைவரும் சசிகலாவை சந்திக்கின்றனர், அவரே அதிமுகவுக்கு அனைத்து உத்தரவுகளையும் பிறப்பிக்கிறார் என கூறப்படுகிறது.
 
இதைவிட முக்கியமான விஷயம் ஒன்று அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் சசிகலா குடும்பத்தினரை கட்சியில் இருந்தும் போயஸ் கார்டனில் இருந்தும் சில காரணங்களுக்காக தூக்கி எறிந்தார் ஜெயலலிதா. சசிகலா, திவாகரன், டிடிவி தினகரன், மகாதேவன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கிய ஜெயலலிதா சசிகலாவை மட்டும் போயஸ் கர்டனில் அனுமதித்தார்.
 
தற்போது ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்தில் இவர்கள் அனைவரும் சசிகலா உடன் ஒன்று சேர்ந்து ஒரே அணியில் இருக்கிறார்கள். மருத்துவமனைக்கும், போயஸ் கார்டனுக்கும் வந்து செல்கிறார்கள், ரகசிய சந்திப்புகள் கூட நடப்பதாக தொண்டர்கள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதனால் அதிமுக வட்டாரத்தில் திக்...திக்... சூழலே நிலவி வருகிறது. என்ன நடக்கிறது? கட்சியில், யாருடைய கட்டுப்பாட்டில் கட்சி இருக்கிறது? அமைச்சர்கள், நிர்வாகிகள் மவுனமாக இருப்பது ஏன்? என ஏகத்துக்கும் குழப்பத்தில் உள்ளனர் அதிமுகவினர்.

ஜெயலலிதா விரைவில் குணம்பெற்று வந்தால்தான் இந்த சூழல் மாறி தொண்டர்கள் குழப்பம் தெளியும்.
அடுத்த கட்டுரையில்