எச்ஐவியால் 22 ஆண்டுகள் பாதிக்கப்பட்டவர் குணமடைந்தாரா? எப்படி முடிந்தது?

வெள்ளி, 29 ஜூலை 2022 (22:11 IST)
1980களில் இருந்து எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், குணமடைந்துவிட்டது போல் தெரிவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நோயால் குணமடைந்தவர்களில் இவர் நான்காவது நபர் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
இயற்கையாகவே வைரஸை எதிர்க்கும் சக்தியுள்ள ஒருவரிடம் இருந்து ரத்த புற்று நோயான லுகேமியாவுக்கு சிகிச்சையளிக்க அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
 
அடையாளம் வெளியிட விரும்பாத 66 வயதான அவர், எச்.ஐ.வி மருந்து உட்கொள்வதை நிறுத்தியுள்ளார்.
 
அவரது உடலில் வைரஸை இனி கண்டுபிடிக்க முடியாத என்பதில் மிகவும் நன்றி உணர்வுடன் இருப்பதாகக் கூறுகிறார்.
 
கலிஃபோர்னியாவின் டுவார்டேயில் சிகிச்சை பெற்ற மருத்துவமனையின் பெயரால் அந்த நபர் 'சிட்டி ஆஃப் ஹோப்' நோயாளி என்று அழைக்கப்படுகிறார்.
 
ஆன்டிரெட்ரோவைரல் மருந்துகள் (antiretroviral drugs) மக்களுக்கு இயல்பான ஆயுட்காலம் தருவதற்கு முன், அவரது நண்பர்கள் பலர் எச்ஐவியால் இறந்தனர்.
 
'இப்படி ஒரு நாள் வரும் என்று எதிர்பார்க்கவில்லை''
 
மனித நோய் எதிர்ப்பு குறைபாடு வைரஸ் (எச்.ஐ.வி) உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை சேதப்படுத்துகிறது. இது எய்ட்ஸ் (நோயெதிர்ப்பு குறைபாடு காரணமாக ஏற்படும் நோய்) மற்றும் நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கு உடல் தடுமாறுவதற்கு வழிவகுக்கும்.
 
ஓர் அறிக்கையில், அந்த நபர் கூறினார்: "1988ஆம் ஆண்டு எனக்கு எச்ஐவி இருப்பது கண்டறியப்பட்டபோது, ​​பலரைப் போலவே, நான் அதை மரண தண்டனை என்று நினைத்தேன்.
 
"எனக்கு இனி எச்ஐவி இல்லாத நாளைப் பார்ப்பேன் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை."
 
ஆனால், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது அவரது எச்ஐவி நோய்க்கு அல்ல. அவர் 63 வயதில் ரத்த புற்றுநோய் லுகேமியாவால் பாதிக்கப்பட்டு, அதற்கு சிகிச்சை பெற்றதால் குணமடைந்தார்.
 
அந்த நபரின் மருத்துவ குழு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவரது ரத்த அணுக்களை மாற்ற எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று முடிவு செய்தது. தற்செயலாக, அவருக்கு 'டோனராக' இருந்தவர் எச்.ஐ.வி. வைரஸைக்கு எதிர்ப்பு சக்தி கொண்டவர்
 
சிசிஆர் 5 எனப்படும் ஒரு புரதம் மூலம் மிக நுண்ணிய வழியைப் பயன்படுத்தி வைரஸ் நம் உடலின் வெள்ளை ரத்த அணுக்களுக்குள் நுழைகிறது.
 
இருப்பினும், இவருக்கு எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சைக்கு உதவியவர் உட்பட சிலருக்கு இந்த சிசிஆர்5 (CCR5) எதிர்க்கும் சக்தி இயல்பாகவே இருக்கும். அவை எச்.ஐ.வியை அண்டவிடாமல் செய்கிறது.
 
 
'சிட்டி ஆஃப் ஹோப் நோயாளி' மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு மிகவும் கவனமாக் கண்காணிக்கப்பட்டார். மேலும் அவரது உடலில் எச்.ஐ.வி அளவுகள் கண்டறியப்படவில்லை.
 
அவர் இப்போது 17 மாதங்களுக்கும் மேலாக ஓய்வில் இருக்கிறார்.
 
எச்.ஐ.வியில் இருந்து அவர் மீண்டு விட்டார் என்பதை அவருக்குத் தெரியப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம். மேலும் அவர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் ஆன்டிரெட்ரோவைரல் சிகிச்சையை இனி அவர் எடுக்க வேண்டியதில்லை, " என்று சிட்டி ஆஃப் ஹோப்பின் தொற்று நோய் மருத்துவர் டாக்டர் ஜனா டிக்டர் கூறினார்.
 
2011 ஆம் ஆண்டில், பெர்லின் நோயாளி என்று அழைக்கப்படும் திமோதி ரே பிரவுன், எச்ஐவி நோயால் குணப்படுத்தப்பட்ட உலகின் முதல் நபர் ஆனார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்