தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கு 2 லட்சத்து 49 ஆயிரத்து 294 பேர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 1 லட்சத்து 86 ஆயிரத்து 128 பேர் மட்டுமே பங்கேற்றனர். அதாவது, சுமார் 74.66% பேர் மட்டுமே தேர்வு எழுதியுள்ளனர். 63,000 பேர் தேர்வு எழ்த வரவில்லை.
துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் போன்ற முக்கிய பதவிகளுக்கான 70 காலியிடங்களை நிரப்ப ஏப்ரல் 1 அன்று அறிவிக்கப்பட்ட இந்தத் தேர்வு, 44 மையங்களில் நேற்று நடைபெற்றது.
நேற்று நடந்த குரூப் 1 முதல்நிலை கேள்வித்தாளில் சில சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்தன. குறிப்பாக, ஒரு கேள்வியில், "தி.மு.க. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முக்கியப் பங்காற்றியது" என்ற கூற்றும், அதற்கு "மக்களை தமிழர் என்ற அடையாளத்தால் தி.மு.க. ஒன்றிணைய வற்புறுத்தியது" என்ற காரணமும் கொடுக்கப்பட்டு, சரியான விடையை தேர்ந்தெடுக்க கேட்கப்பட்டிருந்தது. இந்தக் கேள்வி அரசியல் ரீதியான திணிப்பு என சமூக வலைத்தளங்களில் பலத்த கண்டனத்துக்குள்ளானது.
இதேபோல, மற்றொரு கேள்வியில் வ.உ.சிதம்பரம் பிள்ளை, முத்துசாமி பிள்ளை, ஏ.ஆர்.முதலியார், வாஞ்சி ஐயர் எனச் சாதி பெயர்களுடன் கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் விமர்சிக்கப்பட்டுள்ளது.