3-ம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும்..! தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Senthil Velan

வியாழன், 13 ஜூன் 2024 (12:48 IST)
கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களை சிறப்பு பிரிவினராக கருத வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
 
கடந்த 2017 – 18ம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 ஏ தேர்வில் கலந்து கொண்ட மூன்றாம் பாலின விண்ணப்பதாரரான அனுஸ்ரீ என்பவர், சான்றிதழ் சரிபார்ப்புக்கு தன்னை அனுமதிக்கவில்லை என கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வாதாடிய வழக்கறிஞர்,  மூன்றாம் பாலினத்தவர்களை சமூக, கல்விரீதியாக பின்தங்கியவர்கள் எனக் கருதி,  கல்வி,  வேலைவாய்ப்பில் அனைத்து விதமான இடஒதுக்கீட்டு சலுகைகளையும் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த 2014 ம் ஆண்டு தீர்ப்பளித்தை சுட்டிக்காட்டினார்.
 
ஆனால் மத்திய, மாநில அரசோ இதுவரை இதுசம்பந்தமான விதிகளை வகுக்கவில்லை என வாதிட்டார்.  இதனால்  மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் அவலமான நிலையில் வாழ்க்கை நடத்த வேண்டிய சூழல் இருப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.
 
இதை பதிவு செய்த நீதிபதி,  கல்வி, வேலைவாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு போதுமான வாய்ப்பை வழங்கி,  தரமான வாழ்க்கையை வாழ வைக்க வேண்டியது அரசின் கடமை என்றார்.  மூன்றாம் பாலினத்தவர்களை கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு ஆண்களாகவோ, பெண்களாகவோ கருதாமல் தனி பிரிவினராக கருதி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டார்.

ALSO READ: காவல் ஆய்வாளர்கள் 40 பேர் பணியிட மாற்றம்.! சென்னை காவல் ஆணையர் அதிரடி நடவடிக்கை..!!
 
மேலும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு தொடர்பாக பிரத்யேக விதிகளை வகுக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர்களை ஆண்கள், பெண்கள் பிரிவில் சேர்க்க கூடாது எனவும் நீதிபதி வலியுறுத்தினார். மேலும் மனுதாரரின் சான்றிதழை சரிபார்க்க அனுமதிக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்