சபரி மலையில் பெண்களுக்கு அனுமதி - கேரள அரசு அதிரடி முடிவு

Webdunia
திங்கள், 7 நவம்பர் 2016 (15:03 IST)
வயது வித்தியாசம்  இன்றி அனைத்து பெண்களையும், சபரி மலை கோவிலில் அனுமதிக்க தயார் என்று கேரள அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.


 

 
கேரளாவில் உள்ள சபரி மலையில் காலம் காலமாக 10 வயதிலிருந்து 50 வயது வரையிலான பெண்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பல பெண்கள் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால்,  ஐதீகத்தை மாற்ற முடியாது என்று கோவில் நிர்வாகம் கூறிவிட்டது. 
 
இந்த முடிவை எதிர்த்து, இளம் வழக்கறிஞர்கள் சங்கம் என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதில், அனைத்து தரப்பு பெண்களையும், சபரி மலை கோவிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.
 
இதுபற்றி விளக்கம் அளிக்குமாறு, உச்சநீதிமன்றம், கோவில் நிர்வாகம் மற்றும் கேரள அரசைக் கேட்டுக் கொண்டது. இதற்கு பதிலளித்த கோவில் நிர்வாகம், சபரிமலை அய்யப்பன் பிரம்மச்சாரி என்றும், எனவே அங்கு பெண்களை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தது.  கோவில் நடைமுறைகளில் அரசு தலையிட விருப்பமில்லை என்று கேரள அரசும் பதில் அளித்தது.
 
இதற்கிடையில், கேரளாவைச் சேர்ந்த பெண் பக்தர்கள் அமைப்பு மற்றும் சென்னையில் இயங்கி வரும் தன்னார்வ அமைப்பு ஆகியவை உச்சநிதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
 
அனைத்து பெண்களுக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும். அவர்களுக்கும் பிரார்த்தனை செய்ய உரிமை உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
 
அது தொடர்பான வழக்கு இன்று, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொல்லப்பட்டது. 

அப்போது பதில் அளித்த கேரள அரசு, சபரி மலையில் வயது வித்தியாசம் இன்றி அனைத்து பெண்களையும் அனுமதிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தது.
 
இதன்மூலம், பல வருடங்களாக இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது. இனி சபரிமலையில் தரிசனம் செய்ய அனைத்து வயது தரப்பு பெண்களுக்கும் அனுமதி கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்