தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் இருந்த துறைகள் அமைச்சர் பன்னீர் செல்வத்துக்கு ஒதுக்கப்பட்டு இலாக்கா இல்லாத முதல்வராக நீடித்து வந்தார் ஜெயலலிதா.
அமைச்சரவைக்கு தலைமை தாங்குவது என அறிவிக்கப்படாத பொறுப்பு முதல்வராகவே பன்னீர் செல்வம் இருந்து வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ஓய்வில் இருந்து வரும் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபடியே அரசு நிர்வாகத்தை கவனித்து வருகிறார் என அதிமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறியுள்ளார்.
தமிழ் செய்தி இணையதளம் ஒன்றுக்கு பேட்டியளித்த சி.ஆர்.சரஸ்வதி, லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்களின் பிரார்த்தனையால் அம்மா நலமடைந்து விட்டார் என்று அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் ரெட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூறினார்.
அம்மா நன்றாக குணமடைந்து விட்டார். மருத்துவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இப்போது அவர் ஓய்வில் இருக்கிறார். அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளுக்கு மருத்துவமனையில் இருந்தே உத்தவு போடுகிறார்.
ஆட்சி நிர்வாகத்தையும் அவர் மருத்துவமனையில் இருந்தே கண்காணித்து வருகிறார். அதிகாரிகள், அமைச்சர்கள் தங்களின் பணிகளை செய்து வருகின்றனர். ஆட்சி நிர்வாகம் நன்றாகவே நடைபெறுகிறது என்று கூறியுள்ளார்.