ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படுமா.? பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கேள்வி..!!

Senthil Velan

புதன், 12 ஜூன் 2024 (14:43 IST)
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
 
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள பதிவில், 2014ம் ஆண்டு ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தின் வாக்குறுதியை நிறைவேற்ற மோடி அரசு தவறியது குறித்து 7 ஆண்டுகளுக்கு முன்பு மாநிலங்களவையில் உரை நிகழ்த்தியதாக தெரிவித்துள்ளார்.
 
துரதிருஷ்டவசமாக, அது இன்றும் உண்மையாகவே இருக்கிறது என்றும் சந்திரபாபு நாயுடு, இந்த பிரச்சினையை தீவிரமாக எடுத்துக் கொள்ளாதவரை, பிரதான் மந்திரி செயல்படுவார் என்ற நம்பிக்கை இல்லை என்றும் ஜெயராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார். 
 
2014 மார்ச்சில் புனித நகரமான திருப்பதியில் வாக்குறுதி அளித்தது போல் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்தை பிரதமர் வழங்குவாரா? என கேள்வி எழுப்பி உள்ள அவர், போலாவரம் பல்நோக்கு பாசனத் திட்டத்துக்கான நிலுவை நிதியை அவர் விடுவிப்பாரா? தனது அரசு முன்னோடியாகக் கொண்டு வந்த விசாகப்பட்டினம் எக்கு ஆலையை தனியார்மயமாக்குவதை அவர் நிறுத்துவாரா? என்று சரமரியாக வினவியுள்ளார்.

ALSO READ: ரேபரேலியா - வயநாடா.? எந்த தொகுதி.? ராகுல் காந்தி சொன்ன பதில்..!
 
ஆந்திராவை தலைமையிடமாகக் கொண்ட புதிய தென் கடற்கரை ரயில்வே மண்டலத்தை பிரதமர் செயல்படுத்துவாரா? கடப்பா எக்கு ஆலை, துக்கிராஜுபட்னம் துறைமுகம், காக்கிநாடா பெட்ரோ வளாகம், மாநிலத்துக்கான ஒரு வேளாண் பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டத்தில் அவர் 10 ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ள பல்வேறு உறுதிமொழிகளுக்கு இறுதியாக ஒப்புதல் அளிப்பாரா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் எழுப்பியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்