மத்தியில் அரியணை ஏறப்போவது யார்..? நாளை வாக்கு எண்ணிக்கை..!! பாஜக - காங்கிரஸ் முறையீடு.!

Senthil Velan

திங்கள், 3 ஜூன் 2024 (14:46 IST)
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், பலத்த பாதுகாப்புடன் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
 
மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. தேர்தலில் பாஜக மூன்றாவது முறையாக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், கருதுக்கணிப்புகள் பொய்க்கும் என  இந்தியா கூட்டணி தலைவர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 8.30 மணி முதல், மின்னணு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். எனினும், தபால் வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவித்த பிறகே, மின்னணு இயந்திர இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
தமிழகத்தின் பேரவை தொகுதி வாரியாக ஒரு தொகுதிக்கு 14 மேஜைகள் என 3,300 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள், வாக்குப்பதிவு சதவீதம் அதிகம் உள்ள இடங்களில் 30 மேஜைகள் வரை போடப்பட்டுள்ளன. ஒவ்வொரு மேஜைக்கும் தனியாக சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை முழுவதும் பதிவு செய்யப்படுகிறது. 
 
வாக்கு எண்ணும் பணிக்காக 10 ஆயிரம் அலுவலர்கள், உதவியாளர்கள் உட்பட 24 ஆயிரம் பேர், நுண்பார்வையாளர்கள் 4,500 பேர் என 38,500-க்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்படுகின்றனர். 58 பொது பார்வையாளர்கள், 817 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 
பாதுகாப்பு பணிக்காக, 15 கம்பெனி துணை ராணுவ படையினர் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதுதவிர, தமிழகம் முழுவதும் நாளை 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். நாளை பிற்பகலுக்குள் மத்தியில் யார் ஆட்சி அமைப்பார் என்று தெரியவரும் நிலையில், ஆளும் பாஜகவும்,  இந்தியா கூட்டணியும் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளன.
 
வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல் நெறிமுறைகளைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டிருந்த நிலையில், அதை முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று  இந்தியா கூட்டணி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் இயந்திரங்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்களை சிசிடிவி இருக்கும் இடங்களிலேயே வைக்க வேண்டும் என்றும் இந்தியா கூட்டணி வலியுறுத்தி உள்ளது.

ALSO READ: வினாத்தாள் கசிந்த விவகாரம்..! நீட் தேர்வு ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு..!

மறுபுறம் ​​தேர்தல் செயல்முறையைக் குலைக்க எதிர்க்கட்சிகள் முயல்வதாக பாஜக தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்