ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50% வரி விதித்த நிலையில், அமெரிக்காவுடனான ஆயுத ஒப்பந்த நடைமுறைகளை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்துடன் தொடர்புடைய மூன்று இந்திய அதிகாரிகள், இந்தியா அமெரிக்காவிடம் இருந்து புதிய ஆயுதங்கள் மற்றும் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தங்களை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஓரிரு வாரங்களில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் தற்போது அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையே, பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் சீனாவுக்கும், ரஷ்ய அதிபர் புதின் இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவுக்கும் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.