சச்சின் காலத்துக்குப் பிறகு கடந்த 10 ஆண்டுகளாக உலகளவில் கிரிக்கெட்டின் முகமாக இருப்பவர் விராட் கோலி. அவர்தான் இன்றைய தேதியில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரராக உள்ளார். இதனால் அவரை சமூகவலைதளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதிக ரன்கள் குவித்த வீரர். அதிக சதங்கள் அடித்த வீரர் என பல சாதனைகளைத் தன் பேருக்குப் பின்னால் கொண்டுள்ளார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு கோலி டி 20 கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பைத் துறந்தார். அதன் பின்னர் அவர் ஒருநாள் தொடருக்கான அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். 2022 ஆம் ஆண்டு அவர் டெஸ்ட் அணிக்கானக் கேப்டன் பொறுப்பில் இருந்தும் விலகினார். அதே போல அவர் நீண்டகாலமாக தலைமையேற்று வழிநடத்தி வந்த ஆர் சி பி அணியின் கேப்டன் பதவியையும் ராஜினாமா செய்தார்.
இதுபற்றி தற்போது அவர் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் “நான் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் இந்திய அணிக்குக் கேப்டனாக செயல்பட்டேன். இதன் காரணமாக ஒவ்வொரு போட்டியிலும் என் மீது எதிர்பார்ப்பு இருந்தது. அது அழுத்தமாக மாறியதால் நான் கேப்டன் பதவியை ராஜினாமா செய்தேன். என் கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்பகால கட்டத்தில் தோனியும், பயிற்சியாளர் கிறிஸ்டனும் என்னை சுதந்திரமாக விளையாட சொல்லி ஆதரவளித்தனர்” எனக் கூறியுள்ளார்.